அவளின் முத்தங்கள்.






நம்மாளு இப்படியிருக்க மாட்டானே... இப்போ கொஞ்ச நாளா ஏதோ ஒண்ணு மிஸ்ஸாகுதே.."

என மனதில் நினைத்தபடியே கலா தன் கணவன் அபிராமுக்கு காஃபி கொண்டுவந்தாள்..

"நேத்து நீ வரைஞ்சத தப்புனு மிஸ் சொல்லிட்டாங்கப்பா"

"ஏனாம்.... சரியாத்தானம்மா வரஞ்சிருக்கு.".

"அதான் தப்பப்பா.. நான் வரைஞ்ச மாதிரி வரைச்சிருக்கனும்.. நீ அப்படியே இஞ்சினியர் மாதிரி வீடு வரைஞ்சு கொடுத்தா... மிஸ் கண்டுபிடிக்க மாட்டாங்களா.. ?

இன்னைக்கு நாலு காய்கறி வரைய சொன்னாங்க. வரைஞ்சு கொடு... ஆனால் நான் வரைஞ்ச மாதிரி வரைஞ்சு கொடுக்கணும்...ஒகே..."

என அப்பனும் மகளும் பேசிக்கொண்டே ஹோம் ஒர்க் செய்தார்கள்.

"ஏய் மீனா.. வரவர நீ ஒழுங்கா ஹோம் ஒர்க் செய்யரதே இல்லை.. எல்லாத்தையும் அப்பா தலையில கட்டிடுறே.."

"நீ சும்மா உளறாதே... தேர்ட் ஸ்டாண்டர்டு படிக்கிற புள்ளைக்கு டிராயிங் வருமா வராதானு தெரியாம... வீடு வரஞ்சி எடுத்துட்டுவா.. மயில் வர... குயிலுவரனு சொன்னா... வேற யாராச்சும் தான் வரைஞ்சுதருவாங்க.. அதுஅதுக லெவலுக்கு சொல்லித்தரணும்.."

"போதும் வாய மூடுங்க.. ஏற்கனவே உங்க பொண்ணு வாய் திருச்சிவரைக்கும் பேசும்.. இதுல நீங்க வேற இப்படி சொல்லிக்கொடுங்க... இன்னும் கிழியும்.. எந்திருச்ச போய் காஃபிய குடிங்க" என அபியை விரட்டினாள் கலா..

"சம்மரி போட்டுட்டியா.. எங்க காட்டு" என அவள் செக் செய்ய... அபி மெதுவாய் அறையைவிட்டு எழுந்து ஹாலுக்கு வந்தான்.

ஏதோ ஒரு புக்கை எடுத்து புரட்ட தொடங்கினான் காஃபியின் சுவையை உறிஞ்சி கொண்டே... அவன் நினைவுகள் எங்கோ அலைபாய்ந்தது..

"என்னங்க.. எங்கயாச்சும் போவோம்மா.." என அவனை நெருக்கி அமர்ந்தபடி கேட்டாள் கலா.

"சொல்லு சண்டே போலாம்.. எங்க ...?"

"சண்டே வேண்டாம்... அது யூஸ்வலா போறதுதானே... நாளைக்கு போவோம்.."

"நாளைக்கா ?

"என்ன விசேஷம்... ?

"அட போங்க... ஏதாச்சும் விஷேசம்னாதான் கூப்டுபோவீங்களா..? சரி.. விடுங்க.."
என உள்ளே எழுந்து சென்றாள் தொடர்ந்து பின் சென்றான் அவன்...

"சொல்லுடி என்ன பிரச்சினை.."

"ஒன்னுமில்லை மனசு ஒருமாதிரி இருக்கு..."

"சொல்லு என்ன பிரச்சினை..."

"ஒரு பிரச்சினையும் இல்லை.. நீங்க போய் உங்க வேலைய பாருங்க..."

"சரி சரி..ஒகே.! சாரிம்மா..நாளைக்கு பாப்பாவ ஸ்கூலுக்கு அனுப்பிட்டு ரெடியா இரு. காலைல ஆபீஸ் போய் சைட்டுக்கு வேற யாராச்சும் மாத்திவிட்டுட்டு... நான் வந்துட்றேன். ரெடியா இரு,

"ஒண்ணும் வேணாம்..."

"நோ நோ.. இது இந்த அபியோட ஆர்டர். பாப்பாக்கு மட்டும் மதியம் லஞ்சு செய். நாம வெளியே பாத்துக்கலாம்... "
சொல்லிவிட்டு மீண்டும் ஹாலுக்கே சென்றான் அபி .

அவளுக்கு கொஞ்சம் நிம்மதியாய் இருந்தது. நாளை கண்டிப்பாக கேட்கவேண்டும். இந்த ஒரு மாதம் இவன் ரொம்ப மாறியிருக்கிறான். முன்னாடி எல்லாம் வேலைவேலைனு உயிர விடுவான். இப்ப டாணு ஏழு மணிக்குள்ள வீட்டுக்கு வந்துடுறான். ஞாயிற்றுகிழமை... விளையாட போனாலும் 12 மணிக்கு வீட்டுக்கு வந்துடுறான்... எல்லா ஞாயிறும் அவுட்டிங் கூட்டிட்டு போறான்.. ஆனா வேலை முன்னாடிக்கு இப்ப நிறையதான் எடுத்துருக்கான்... எல்லாம் கேட்கணும்... வீட்ல கேட்டா குதிப்பான்... என அவள் மனதுக்குள் நாளைக்ககான கேள்விகளை தயாரித்து நடத்தி கொண்டிருந்தாள்.

மறுநாள் ...
"இது என்ன ஹோட்டல்... செமயா கட்டி இருக்கு.. சென்னையிலையா இப்படி ஒண்ணு" என ஆச்சரியமாய் கேட்டாள்.

சிரித்தபடி சொன்னான்.. "இதுக்கு பிளானிங் நாங்க.. ஆனா வொர்க் எடுத்து செஞ்சது மட்டும் மும்பை கம்பெனி. "

ஏன் அப்படி...?

"அவங்க சொன்ன கெடுவுக்குள முடிக்க எங்களுக்கு முடியல.. அதுனால பிளானிங் மட்டும் நாங்க..."

"செமயா இருக்கு. நீங்க போட்ட பிளானா"

"நான் மட்டுமில்லை... எல்லாரோட உழைப்புமிருக்கு..."

அந்த மெனுகார்டில் பார்த்து

"என்ன சாப்பிடலாம்..?

"முதல்ல ஐஸ்கிரீம் ஆர்டர் செய்ங்க.. மீதி அப்புறம்.."

ஆர்டர் சொன்னான். வாஷிங் பவுல் வந்தன. கூடவே மடியில் மூடும் டவல் வந்தது.

"சரி.. சொல்லு என்ன பிரச்சினை.?" கலாவை பார்த்து கேட்டான்

"நீங்க தான் சொல்லணும்"

"நான் சொல்லவா..? நான் என்ன சொல்ல...?

"ஒரு மாசமா சீக்கிரம் வீட்டுக்கு வர்ரீங்க... அடிக்கடி அவுட்டிங்.. மகளிடம் ரொம்ப அன்பா இருக்கிறீங்க. "

"ஒண்ணுமில்லையே எப்பவும் போலத்தான் இருக்கேன்." சமாளிக்கிறான்.

"கிழிச்சீங்க... உங்க முகரைய பார்த்தாலே தெரியுது... வழியாம சொல்லுங்க..?

"என்னத்த சொல்ல..?

"ஏதும் சின்னவீடு செட் பண்ணிட்டிங்களா?.. அத மறைக்கத்தான் இப்படி கொஞ்சுறீங்களா.?

அவன் வாய்விட்டு சிரித்தான். ஆனால் அதில் உயிரில்லை. மெதுவாய் சொன்னான்..

"நீயா கேட்பே சொல்லனும்னுதான் இருந்தேன் " என கொஞ்சம் சீரியஸ் ஆனான்.

"என்னங்க ஏதும் பிரச்சினையா.?

அவன் இல்லையென தலையாட்டியபடியே அவனது அலுவலக பையை திறந்தான். ஒரு டைரியை திறந்து ஒரு பேப்பரை எடுத்து நீட்டினான்.

"என்ன இது ..?

முதல்ல இதைபடினு சொல்லிவிட்டு பின்னால் நகர்ந்து அமர்ந்தான்.

அவள் படிக்க தொடங்கினாள்...

அன்புள்ள மகனுக்கு,

"கண்டிப்பா என்னைக்காச்சும் இந்த கடிதம் உன் கையில கிடைக்கும்னு நான் நம்புறேன். உங்கப்பாவுக்கு மனைவியா உனக்கு அம்மாவ இந்த கடிதம் எழுதுறேன். ரொம்ப பெரிய கடிதம் பொறுமையா படிக்கணும்.நேரமில்லே அவசரமா வேலை இருக்குனு பாதி படிச்சி மீதிய இன்னொரு நாள் காத்திருந்துப் படிக்காதே.

உங்கப்பாவ கல்யாணம் பண்ணும்போது நான் காலேஜ் லெக்சரர். அப்புறம் நீ பிறந்த பிறகு உங்கப்பாக்கு அதிர்ஷ்டம் அடிச்சுது. இன்னும் கன்ஸ்ட்ரக்‌ஷன் பிஸினஸ்ல நல்லா வளர்ந்தாரு. அப்புறம் உன் தங்கச்சி பொறந்தாள். நானும் வேலையை விட்டுட்டு வீட்டோட உங்கள கவனிச்சுட்டு இருந்தேன். நீயும் வளர்ந்தாய்..உனக்கு தான் தெரியுமே அப்பா எப்படி பிசியா இருந்தாருனு...

கல்யாணம் ஆன ஒரு வருஷம் தான் கனவு வாழ்க்கை. அப்புறம் எல்லாமே காத்திருந்த வாழ்க்கைதான்.

உங்கப்பாவுக்காக காத்துகிட்டு இருப்பேன். அவர் அவர் உருவாக்க நினைச்ச ஆடம்பர வாழ்க்கைக்காக உழைச்சிட்டு இருந்தார். நீங்கள் ரெண்டு பேரும் தான் எனக்கு துணை. நாம தான் வீட்டுக்குள்ளே விளையாடுவோம். அப்புறம் நீங்க ஸ்கூலுக்கு போய்டுவீங்க.. நீங்க ஸ்கூல் முடிஞ்சு வரதுக்கு காத்திட்டுருப்பேன்.

ஸ்கூல்விட்டு வந்ததும் கதைகதையா சொல்லுவீங்க.. அதுல பாதி பொய் இருக்கும்.. அதெல்லம் உங்க கற்பனைனு நினைச்சு ரசிச்சேன். அப்புறம் நீங்க வளர்ந்து பெரிசாயி உங்க நண்பர்கள் வட்டத்துக்குள்ளே போய்ட்டீங்க..

அம்மாட்ட சொல்ல ஏதுமில்லாம போச்சு. ஆனா உங்கள்ட்ட இருந்து ஆர்டர் மட்டும் வந்துச்சு. இப்ப வெளியே போகணும்...
இன்ன டிரஸ் எடுக்கணும்..
இன்ன சாப்பாடு வேணும்.. இப்படி வெளியே போகணும்னு..
ஆனா வர்ற டைம் கேட்க முடியுமா அம்மாவால்.......

காத்திட்டு இருப்பேன். நீங்க சாப்டுட்டு வரீங்களா.... சாப்பிடாமா வரீங்களானு பார்க்க காத்திட்டு இருப்பேன்....நீங்க எக்ஸ்டரா கோச்சிங், பிரண்ட்ஸ் அரட்டைனு..பிசியா வருவீங்க.

இடையில உங்கப்பா உடம்பு முடியாம படுத்துட்டாரு. அவருக்கு டயத்துக்கு மாத்திரை கொடுக்கணும், மருந்து கொடுங்கணும், பிசியோதெரபி பண்ணனும் காத்திட்டுருப்பேன். இப்படி காத்திட்டு இருக்கிறதே என்னோட வாழ்க்கை ஆகிடுச்சு பாத்தியா?

அப்புறம் உன் தங்கச்சி கல்யாணம்... இப்ப அவ எப்படி இருந்தாலும் அவளா முடிவு செய்ற ஓய்வு நேரத்திலதான் என் கூட பேச முடியும்.... ஏன்னா அங்க அவ காத்திட்டு இருக்கா .... ஒரு அம்மாவா...

உனக்கு சொல்லவே வேண்டாம்... அப்பா தொழில எடுத்து செய்ய ஆரம்பிச்ச உடனே நீ ரொம்ப பிசியாகிட்ட.. நீ கடைசி ஐஞ்சு வருஷத்தில் அம்மாட்ட பேசுனத கொஞ்சம் யோசிச்சு பாரு..
சாப்டிங்களா,
மாத்திர போட்டாச்சா..
டாக்டர்ட்ட போனீங்களா..
ஊசிபோட்டாச்சா... இவ்ளோதான்..

உங்கப்பாவும் வாழ்ற காலத்தில ரெம்ப பிசியா இருந்தாரு.. நான் காத்திட்டு இருந்தேன். கடைசி காலத்தில் பிசிஏதுவும் இல்லாம இருந்தாரு.. ஆனா மாத்திரைக்கு காத்திட்டு இருந்தாரு... என்னோடு பேச அவருக்கு விசயமே இல்லை... பேப்பர் படிச்சாரு. புக் படிச்சாரு.. வர்ற போன்ல பேசுனாரு.. தூங்குனாரு..

ஏன்னா பேச வேண்டிய காலத்தில் பேசல... பேச நேரமிருந்த காலத்தில் பேச விஷயமில்லை... அனுபவமும் இல்லை.

இப்படித்தான் பெரும்பாலான அம்மாக்களோடு வாழ்க்கை முடிஞ்சு போகுது. நான் என்னைக்காச்சும் சண்டேல வெளியே போகும் போது அங்க நிறைய அம்மாக்கள பார்ப்பேன்.. அவங்க எல்லார் கண்ணிலும் எனக்கு தெரியுறது காத்திருந்த ஏக்கம் தான்.

உன்னை மாதிரி பசங்க கூட்டிட்டு வர அவங்க மனைவிகளை பார்ப்பேன்... அதுல இன்னைக்கே வாழ்ந்துடணும்... அடுத்த ஆறு நாள் இவன் கூட பேசக்கூட முடியாதுன்ற ஒரு வேகம் இருக்கிறத பார்த்தேன். இன்னைக்கு ஒரு நாள்
தானே தன்புள்ளைக கேட்ட எல்லாம் செய்ற அப்பாக்கள் பார்த்தேன். இது கொஞ்சம் கொஞ்சமா அவங்களுக்கு காரியம் சாதிக்கிற நாள் ஆகிடுதுனு புரிஞ்சுது..

அம்மா இதெல்லாம் ஏன் இப்ப சொல்றேனு யோசிக்கிறியா...? என் காலத்தில் இதெல்லாம் உங்கப்பாட்ட சொல்லி புரிய வைக்க முடியல.. ஆனா நீ அடுத்த ஜெனரேஷன்.. கொஞ்சம் யோசிப்பால்லே.. அதான் உன்ட்ட சொல்றேன்..

நான் உயிரோடு இருக்கும் போது சொல்ல முடியல... சொன்னாலும் உன்னால கேட்க முடியாது.. அதனால தான் இப்ப சொல்றேன். உனக்குனு வீட்ல ஒரு பொண்ணு இருக்கா.. அன்பான மனைவி இருக்கா... அவங்க உனக்காக காத்திட்டு இருக்காங்க...

உன் தங்கச்சிக்கு உங்கப்பா மேல இருந்த பாசம் உனக்கு தெரியாது.. ஆனால் அத அப்பா உணர்ந்த போது அப்பாவால கட்டில்ல நகர முடியாம இருந்தாரு.

அவருதான் அப்பானு அவபடிக்கும்போ காலேஜ்க்கு.. ஸ்குலுக்கு.. தெரியாத அளவு அவர் பிசி.... அப்பா கூட அங்க போகணும் இங்க போகணும்ங்கிற எந்த ஆசையும் அவளுக்கு நிறைவேறல.. அவ அப்பா கடைசி காலத்தில சும்மா இருந்தபோது அவர் பேசுனத அவ கேட்க முடியல ஏன்னா அவ கல்யாணமாயி வேறு வீட்டுக்கு போய்ட்டா...
பார்த்தாயா வாழ்க்கையை ?

மகனே.. நான் உன்னிடம் சொல்வது..
உன் பொண்ணுக்கு அப்பாபோல ஒரு வாழ்க்கையை நீ கொடுத்துடாதே ?
உன் மனைவியை அவளோட மகனுக்கு இதுபோல கடிதம் எழுத வச்சிடதா... இன்னைக்கு மூணுவேளை சாப்பிட சம்பாதிச்சுட்ட. நாளைக்கு மூணு வேளைக்கும் உனக்கு பிரச்சினை இல்லை. இன்னும் சொல்லபோனா நீ இப்ப உழைக்கிறது உன்னோட அடுத்த பலவருஷம் கழிச்சி செலவழிக்க போறதுக்குதான்.. அத கொஞ்சம் குறைச்சிக்கோ.. சீக்கிரம் வீட்டுக்கு போ.. பொண்டாடிகிட்ட புள்ளைககிட்ட நிறைய பேசு... அவங்களுக்கும் நீ நல்லா இருக்கும் போதே கொஞ்சம் நேரம் கொடு.... ஏன்னா அன்புக்காக காத்திட்டு இருக்கிறதும், காக்க வைக்கிறதும் ஒரு வாழ்க்கையே இல்லை.

நீ அம்மாவை புரிஞ்சிட்டு செய்வேனு நம்புறேன். ஏன்னா சிறுவயசில என்னோடு நல்லா பேசின பையன் தானே நீ... உன் மனைவி மகள விட்டுடவா போற...

இப்படிக்கு
உன் அன்பு அம்மா.

கடிதத்தை படித்து முடிந்தாள். அவள் முகம் ஒருவித பரபரப்பில் இருந்தது.. ஏக்கத்தோடு நிமிர்ந்து அவனை பார்த்தாள்....
அந்த பார்வையாலே அவனை கட்டியணைத்து முத்தமிட்டாள்..

மேசையில் இரண்டு மிகப்பெரிய வென்னிலா ஐஸ்கீரிம் வந்திருந்தது...

அவள் மெதுவாய் தன் அலைபேசியை எடுத்து அவள் அம்மாவிற்கு போன் செய்தாள்.....

."நான்தாம்மா"
.....
"ஏன் சும்மா பேசக்கூடாதா..."
.....
"என்ன செய்ற..."
....
"அப்பா என்ன செய்றாரு..."
....
என பேசத்தொடங்கினாள்.

ஐஸ்கீரிம் கொஞ்சம் கொஞ்சமாய் உருக தொடங்கியது.... .

அவன் அவளை ரசித்தபடி சாப்பிட தொடங்கினான்..

அவளுக்கு அவனது மாற்றத்துக்கான காரணம் புரிந்தது...

இனிமேல்...
அந்த வீட்டில் அன்பிற்காக யாரும் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை...

"வேற எதாவது சாப்பிட ஆர்டர் பண்ணவா..? "

"வேணாங்க சீக்கிரம் பில்லை கொடுங்க வீட்டுக்கு போலாம்.."

அவளது அவசரம் அவனுக்கு புரிந்தது....

உங்களுக்கும்...!

No comments:

Post a Comment

Popular Posts